Sunday 12 June 2011

சிறீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலையே - அருந்ததி ராய்

சிறீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலையே எனவும், அங்கு இடம்பெற்ற இக்கொடுமையைப் போல் ஒன்றை தான் வேறெங்கும் கண்டதில்லை எனவும் பிரபல எழுத்தாளரான அருந்ததி ராய் லண்டனில் நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பொன்றில் பேசுகையில் கூறினார்.




சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத்ஹோல் பகுதியில் நடைபெற்ற இச்சந்திப்பில் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களும், சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

எங்களுக்கு தெரியும், அங்கே நடந்த கொடிய போரைப்பற்றி. வைத்தியசாலைகள் மீது குண்டுவீச்சு, எறிகணை தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. குறுகிய திறந்த வெளி நிலப்பரப்பை போர் அற்ற பாதுகாப்பு பிரதேசமாக அறிவித்து அப்பகுதிகளுக்குள் மக்களை வரச்சொல்லி பின் அப்பகுதிக்குள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதும் எமக்கு தெரியும் எனவும்,

சர்வதேச நாடுகள் தமது பொருளாதார மற்றும் இராணுவ நலன்சார்ந்த தந்திரோபாய ரீதியில் சிறீலங்காவில் இவ்வாறான கொடிய போருக்கும், அதனூடான இனப்படுகொலைக்கும் அனுமதித்துள்ளதாகவும், சிறீலங்காவில் நடைபெற்றதை முன்மாதிரியாக பின்பற்றி பிராந்திய நாடுகளும் செயற்பட வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை சொல்லிக்கொண்டு அரசியலில் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட தமிழக தலைவர்களை தான் நன்கு அறிந்துள்ளதாகவும், அதேவேளை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கியுள்ள முகாம்களுக்கு தான் சென்ற போது அங்கு அவர்கள் மிருகங்களைப்போல் நடாத்தப்படுவதை தான் கண்டதாகவும், இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள் அக்கறை கொள்ளவில்லை எனவும் அருந்ததி ராய் மேலும் தெரிவித்தார்.

--------------------------------------------



----------------------------------------------


No comments:

Post a Comment